ஜெயஸ்ரீ ஷங்கர்

Monday, May 30, 2016

அழகே...அழகே.....என்னோடு வா..!


முடியில்லாவிட்டால் மூளை இருந்தும் பிரயோஜனமில்லை போல....! பார்வைகளே சொல்லும்....சொட்டைத் தலையா, பட்டைத் தலையா, ப்ளே கிரௌண்ட் மண்டையா, வழுக்கை தலையா, என்று பலவித பட்டைப் பெயர்கள் வைத்து ராஜ மகுடம் சூட்டுவார்கள் பாருங்கள்...! அதற்கே ஒரு கிரீடம் கொடுக்க வேண்டும். முடி இருக்கறவனுக்கு மூளையே இல்லாட்டாலும் ராஜாபார்வை பார்ப்பான்.அதுவும் இப்போ ஐ டி கல்ச்சர் வந்தாச்சு....வீதிக்கு வீதி அவைகளோட டென்ஷனை வைத்து பிழைப்பு நடத்த காளான்கள் போல "ஹேர் ட்ரீட்மென்ட்" "ஸ்பா " அது இதுன்னு வித விதமான பெயர்களில் மின்விளக்குப் பலகைகள்....பக்கத்தில் சென்று கொஞ்சம் விலை விசாரித்தால் தெரியும்.....அவர்கள் நமக்கு நாலு முடியை வைத்து விட்டு நம் பர்ஸை மொட்டை அடித்து விடுவார்கள் என்பது. குறைந்தது பத்தாயிரம்...அதிக பட்சம் ஒரு லட்சத்துக்கும் மேலே...பேசாமே முடி போச்சு ....போனால் போகட்டும் போடா.....இந்த பூமியில் முடியினால் ஆவது என்னடா...ன்னு பாடிக்கிட்டே வர வேண்டியது தான்.  இருந்தும்...இணையம் இருக்கே...உபாயம் சொல்லாமல் போகாது. சித்தர்கள் சொன்ன மூலிகை ரகசியங்கள்....வேரின் வித்தகங்கள்...என்று ஏகப்பட்ட விஷயங்கள்...படிக்கும்போதே நம்பிக்கை வருகிறது. நாமும் செய்து தான் பார்போமே...முளைத்தால் முடி....முளைக்காவிட்டால் வழுக்கை. ஆனால் ட்ரை பண்றதுல தப்பே இல்லை. வாருங்கள்....பார்க்கலாம்.

முடி உதிர்வதை தடுக்க

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:

நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.



மாம்பழமாம்....மாம்பழம்...!




மாம்பழம்னு நினைச்சாலே அதன் மணம் , சுவை, மனத்தை கொள்ளை கொள்ளும். சின்ன வயசில் பாடிய பாப்பா பாட்டும் கூடவே நினைவைத் துரத்தும்.

கடிக்க வேண்டாம், அப்படியே குடிப்பேன் என்று சென்ற வருடம் மாம்பழத்தின் சாறுக்கு விளம்பரங்கள் வந்தது போக, இந்த வருடமோ....பாட்டிலையே கடித்து சாப்பிடுவேன்.....அவ்ளோவும் மாம்பழச் சாறு...! என்று ஆசை காட்டி, சக்கரை நோயாளிகளின் மனத்தை பாடாய் படுத்தும் மாம்பழ சீசன் இது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.
உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

ஏதோ கார்பைட் கல்லை வைத்து பழுக்க வைக்கிறார்கள் என்ற புகார் ஊர் முழுக்க உலாவினாலும், மாம்பழ ரசிகர்கள் அவற்றை எல்லாம் காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. ஒரு சீசனுக்கு ஒரே ஒரு பழம் யார் வேண்டுமானாலும்...note the point .....யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். நறுக்க வேண்டாம்.....அப்படியே அலம்பி ரசித்து கடித்து ருசித்து சாறு வழிய வழிய....சாப்பிட்டுப் பாருங்கள்.....சக்கரை பத்திய பயத்தை கொஞ்சம் தூர வையுங்கள். மனம் விரும்பி செய்யும் சில விஷயங்களுக்கு வியாதியும் எட்டிப் போகும். ஆனால் சின்னதா...ஒண்ணே ஒண்ணு தான். 
Done ..:)
எதுக்கு இவ்ளோ பீடிகை தெரியுமோ....? நானும்.....நானும்....எனக்கும்....எனக்கும்.....அதாங்க..சக்கரைக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்காம்...சரி வந்து ஒட்டிக்கோன்னு விட்டுட்டேன்....இப்போ ஓட்ட முடியலை..!

தண்ணீர்...தண்ணீர்...!






ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கேள்விப் பட்டிருக்கிறோம். குடிக்கிறோமா?  தெரியாது.காப்பி, டீ ..என்று சூடான சுவையூட்டி பானங்களுக்கு அடிமை பட்ட மனது. வெறும் தண்ணீர் குடிப்பது என்றால் விரும்பாது தான். மனிதனின் நாக்கு எப்போதும் வயிற்றுக்குப்  பகை. அதற்கு பிடித்ததை இது உண்பதில்லை. இது உண்பதை அது ஏற்பதில்லை. அண்டத்தில் இருப்பது பிண்டத்திலே - அல்லவா..! அது நீர் தத்துவம். நமது மூளை கூட 80% நீரின் தன்மையோடு இருக்கிறது. 

ஒவ்வொருவரும் தண்ணீர் தாகத்துக்கு மட்டுமல்லாது ஆரோக்கியத்திற்கும் நீர் பருக வேண்டும். இது அவசியம். அதுவும் எப்படி...? தாமிர பாத்திரத்துள் சேமித்து வைத்த நீரைப் பருகும் போது அபரிதமான பயன்களை நமது உடல் பெற இயல்கிறது. தாமிர சத்து நீரோடு கலந்து உடலுக்கு உரம் சேர்க்கிறது.

அத்தோடு 4 இலைகள் துளசி சேருங்கள்......அது அமிர்தம்...
கூடவே....சிறிதளவு பச்சை கற்பூரம், ஏலம் , கிராம்பு, சேர்த்து பருகிப் பாருங்கள்....தெய்வீகம் உம்மோடு சேர்ந்து கொள்ளும். நமது ஆன்மாவிற்கு மிகவும் பிடித்த நீர் இது தான். அதனால் தான் கோவிலில் தீர்த்தம் என்று நாம் பருகும் போது மனதிற்குள் ஒரு ஏகாந்தம் ஏற்படுகிறது.

சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது. 

நீரில் இத்தனை விதங்களா....! வியக்க வேண்டாம். செய்து பருகுங்கள்...செய்வது எளிது...பருகும்போது கிடைக்கும் பலன்கள் அரிது.

ஆவாரம்பூ நீர்

"ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ" என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும். 

கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும். 

செம்பருத்தி நீர்

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது. 
காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும். 

நன்னாரி நீர்

"தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்" என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும். 

துளசி நீர்

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, 
தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம். 

வல்லாரை நீர்

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். "காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை" என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.


தினம் ஒரு பழம் உண்போம்...!


இயற்கையோடு இணைந்தது தான் மனிதனின் ஆரோக்கியமான வாழ்வும். ஆமாங்க...இது எல்லோருக்கும் தெரிந்தது தான். இருந்தும், நாமெல்லாம் இப்போ மின்னுலகத்தின் மயக்கத்தில் இயந்திர மனிதர்களாக வாழும் சூழலை ஏற்படுத்திக் கொண்டு, ஆரோக்கியத்தை துரித உணவில் துறந்து விட்டு உடலை வியாதிகளின் கூடாரமாக்கி கொண்டு நிற்கின்றோம். இப்போதாவது விழித்துக் கொள்வோம். மின்னுலகில் முன்னோக்கி சென்றாலும் உடலுக்கு உரம் ஏற்ற உணவு பழக்கத்தில் மட்டும் காலத்தின்  பின்னோக்கித் தான் பிரயாணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.மீண்டும் நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்தால் நோய்கள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சயமாகப் பெற முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதுதான் பிரச்சினைகளுக்கு ஆணிவேர். 

நமது உடலில் இரத்தம் தூய்மையாக இருக்க, என்றும் இளமையோடு இருக்கவும் இயற்கை தரும் உணவு தேன்:
தேனோடு ஆரம்பிக்கும் நமது ஒவ்வொரு நாளும் இனிமையானதும் இளமையானதுமாகவே  தான் இருக்கும்.இது சர்வ நிச்சயம்.

தினமும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள குற்றங்கள் நீங்கும். 

உடல் பருமனைக் குறைக்க வேண்டுமானால் முள்ளங்கி அல்லது கேரட்டைத் துருவி மேலாகச் சிறிது தேன் கலந்து, அருந்தி வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து பருமன் குறையும். 

ஜீரணக் கோளாறுகள் உடையவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சம்பழம் பிழிந்து பருகினால் ஜீரணக் கோளாறுகள் சீரடையும். ரத்தமும் சுத்தம் அடையும்.

தேனுக்கு அடுத்ததாக....நாம் பாலுக்குச் செல்வோமா? ஆமாங்க...இப்பல்லாம் எங்கெங்க நல்ல பால் கிடைக்குது...அதுவும் பசுவின் பால் கிடைத்தால் அவர்கள் தான் அதிர்ஷ்டசாலிகள். இந்த சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் பால்...நாலரைப் பால் என்னும் ஏழரைப் பாலிலிருந்து கொஞ்சம் வெளில வாங்க...அந்தப் பாலை சாப்பிட்டு நோயை அழைப்பதை விட வெந்நீர் எத்தனையோ மேல்.

விரல் நகங்கள் சிதைந்து வலிமை அற்றதாய் இருந்தால், சுண்ணாம்புச் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும். 

நம் உடலுக்கு இயற்கையாய் நித்தம் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட்டால் போதும்....தேவையான சுண்ணாம்பு சத்து கிடைத்துவிடும். அதுமட்டுமா..நகம், தலைமுடி,கண்கள், எலும்புகள், இவரை செழுமையாகக் காப்பது பால் தாங்க. குழந்தைகளின் ஆரோக்கியம் பாலில் தான் துவக்கம்.தயிரைப் பெருக்கி சாப்பிடுங்கள். நெய்யை உருக்கி சாப்பிடுங்கள். இரவில் எக்காரணம் கொண்டும் தயிர் சாப்பிடாதீர்கள். "ராஜாவானாலும் ராத்திரி தயிர் சாப்பிடக் கூடாது"ன்னு சொல்வார்கள். அதேபோல் நெய்யிலாத உண்டி பாழ். அதனால் நெய்யை நித்தம் ஒரு தேக்கரண்டியாவது உணவில் சேர்த்துக் கொள்தல் வேண்டும். சித்த வைத்தியத்தில் பசுவின் நெய் சேர்க்காத மருந்தே இருக்காது. 

இதோ அடுத்தது தாங்க தேனுக்கும், பாலுக்கும் அடுத்தது.....பழம் தாங்க....! அதிலும் பழத்தில் ராஜ பழங்கள் கூட இருக்குங்க. எளிமையா எல்லாராலும் நித்தம் வாங்கி பயன்பெறும் வகையில் ஒரு அதிசய பழம்...!
எலுமிச்சம் பழம் தாங்க அது. தினம் மூன்று வேலையும் எலுமிச்சம் பழத்தின் சாறு சாப்பிட்டு பாருங்கள்...அப்புறம் சொல்வீங்க......ஆரோக்கியம் எப்படி உங்க கிட்டே திரும்ப வந்து சேர்ந்ததுன்னு. ஆப்பிள் வாங்க பணத்தை  எண்ண வேண்டாம்....பத்து ரூபாயில் கை நிறைய எலுமிச்சம் பழம் வாங்கிண்டு வரலாம்.

நமது உடலின் PH balance ஐ சரியாக வைக்க உதவும் இந்த எலுமிச்சம் பழங்கள் ....தரும் பலன்கள் அபரிதமானது.

நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 
கொழுப்பு குறையும்.
மனம் தெளிவுறும் 
புத்தி கூர்மையாகும் 
மன அழுத்தம் குறையும் 
தெய்வீகத் தன்மை கூடும் 
எதிர்மறை எண்ணங்கள் அகலும் 
கண்கள் பளிச்சிடும் 
தோல் நிறம் மாறும் 
உடல் குளிர்ச்சியடையும் 
உடலின் உஷ்ணம் மறையும் 
தலையில் தேய்த்தால் பொடுகு மறையும் 
முகத்தில் அதன் தோலைத் தேய்த்தால் கருமை நிறம் மாறும் 
அசிடிட்டி காணாமல் போகும்.
ரத்தம் சுத்தமாகும் 
இன்னும்...இன்னும்...சொல்லிக்கிட்டே போகலாம்....


இதனைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஊறுகாய்க்கு பயன்படும் என்பதுதான். இதில் வைட்டமின் சி யும், அஸ்கார்பிக் ஆசிட்டும் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ எனக்குத் தெரியாது.

மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கைகொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.

உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். …ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து. ஆனால் ஒன்று தெரியுமா? இந்தமாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதைவிட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது. எனவே காய்கனிகளுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலு}ட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும்.
நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் …ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யைத் தர நோயை எளிதில் குணமாக்கலாம்.


தினம் காலை எழுந்ததும், ஒரு பெரிய டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு பெரிய எலுமிச்சம் பழத்தின் சாறெடுத்து அத்தோடு கூட 6 புதினா இலைகளைக் கழுவி நறுக்கி சேர்த்து ஒரு தேக்கரண்டி இஞ்சியின் சாறு கலந்து பருகிப் பாருங்களேன்....நீங்கள் விரும்பும் மாற்றம் உங்கள் உடலோடு ஒட்டிக்கொள்ளும். ஆரோக்கியத்துடன் வாழ இது இறைவன் அளித்த கொடை மூலிகைகள். 

காலை 6 மணிக்கு இஞ்சி, மதியம் 12 மணிக்கு சுக்கு, மாலை 6 மணிக்கு கடுக்காய் தோல் பொடி ....இதை கண்டிப்பாக 48 நாட்கள் உண்டு வந்தால் என்றும் இளமையோடு சுறுசுறுப்பாக வலம் வரலாம். 

உணவு உண்ணும் நேரங்களில், சிறிது இஞ்சிச் சாறு, எலுமிச்சஞ்சாறு, தேன் இவற்றைக் கலந்து இரண்டு மூன்று தேக்கரண்டி அளவு அருந்தி வந்தால், இரத்தம் தூய்மை அடைந்து, முகப்பருக்கள், மரு,வெண்புள்ளிகள் மறைந்து முகம் தூய்மை பெறும். தக்காளி, ஆரஞ்சு சாத்துக்குடி,அன்னாசி ஆகிய பழங்களில் புத்தம் புது சாறுகள் உடல் ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவும்.

இதோ மகத்தான கீரைகள்....!

தலைமுடி நன்கு வளர, கீரைகள், கொத்துமல்லி, கறிவேப்பிலை, பால் பொருட்கள், முருங்கைக்காய் முதலிய வற்றை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் முடி செழித்து வளரும். 

கறிவேப்பிலைச் சாறும் தேங்காய் எண்ணெயும் கலந்து நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்தி வந்தால் முடி கருத்து செழித்து வளரும்.

தக்காளியைப் பச்சையாகப் பச்சடியாகவோ, சாறாகவோ அருந்தி வந்தால், தோலின் நிறம் கூடும். ரோஜா இதழ்களை தேனில் ஊறுவைத்துத் தயாரிக்கப்படும் குல்கந்து உண்டு வந்தால் தோலின் நிறம் கூடி பளபளப்பு பெறும். 

கேரட் கண்பார்வைக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே இதனை தினமும் பச்சையாக உண்டு வந்தால் கண்பார்வை கூர்மை பெறும். 

நித்தம் இரவு படுக்கப் போகும் முன்னே ஒரு பெரிய மாதுளம் பழத்தை உண்ணும் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள். மாதுளம் பழத்தை உள்ளிருக்கும் பஞ்சோடு சேர்த்து உண்ண வேண்டும். துவர்ப்பு சத்து உடலில் சேர அதைவிட வேறு எதுவும் இல்லை. ரத்தம் பெருக, சோகை மாற, ஆண்மை பெருக, இதயம் வலுப்பெற....சொல்லிக்கொண்டே போகலாம். பழங்களின் ராணி என்றாலும் மிகையாகாது. மாதுளம்பழ மணப்பாகு வாங்கியும் உபயோகப் படுத்தலாம். கூடுமானவரையில் இயற்கையாய் பழத்தை வாங்கி கடித்து சுவைத்து உண்ணுங்கள். ஒரு பழத்தை அரை மணி நேரமாவது நிதானமாக மென்று ரசித்து உண்ண வேண்டும். பழம் மட்டுமல்ல உங்கள் மன உணர்வையும் சேர்த்து உண்ண வேண்டும். குணம் மாறி இனிமையாகும்.மனிதன் மனிதமாகும் மந்திரம் தான் பழத்தில் ருசியாக உள்ளது.